அவரவர் வாழ்க்கையில் - கவிஞர் சினேகன்
விலை ரூ.500
பாரதிராஜாவின் பார்வையில்...
என் இனிய தமிழ் மக்களே!
ஒவ்வொரு கிராமமும் ஒரு பல்கலைக்கழகம்; ஒவ்வொரு மனிதரும் ஓர் உலகம் என்பதற்கு சினேகன் எழுதிய ‘அவரவர் வாழ்க்கையில்...’ என்கிற இந்த நூல் மிகச் சிறந்த உதாரணம்.
எல்லா கவிஞர்களும் இப்படி எழுதிவிட முடியாது. பாரதிக்கும் கண்ணதாசனுக்கும் பிறகு, யதார்த்தமான வாழ்க்கையை எந்தவித எதிர்ப்புமின்றி பதிவு செய்திருக்கிறான் சினேகன். என்னை எப்போதும் ஆச்சர்யப்பட வைக்கும் கவிஞன். உழைப்பும் உற்சாகமும் ஒருமிக்க இணைந்த கலைஞன். இவனது வெள்ளந்தியான புன்னகை, என்னை சலவை செய்திருக்கிறது.
மண்வாசனை மாறாத மனிதப் பண்பும், அரிதாரம் பூசிக்கொள்ளாத அன்பும் சினேகனின் பலம். கற்பக விருட்சத்தின் கிளைகள் உயர வளர்ந்து படர்ந்தாலும் அதன் வேர்கள் மட்டும் இன்னும் பத்திரமாக இருப்பது மண்ணுக்குள்தான் என்பதை இந்தப் படைப்பு நிரூபிக்கிறது. மீண்டும் தாயின் கருவறைக்குள் புகுந்து, தாயின் மடியில் சரிந்து இளைப்பாற எந்த மனிதன்தான் விரும்பமாட்டான். சினேகன், இந்த நூல் மூலமாக அனைவரையும் அவரவர் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறான்.
சினேகன் ஒரு திறந்த புத்தகம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவன் எழுதிய சிறந்த புத்தகம் இதுதான் என்பது நான் அறிந்ததே. காரணம், இதை வாசிக்கும்போது கண்களில் நீரும், நெஞ்சில் நெகிழ்வும், சிந்தனையில் நம்பிக்கையும் பொங்கி ஆங்காங்கே என்னைத் திக்குமுக்காட வைத்தன.
வீரியமிக்க விதைகள், சிலசமயம் பாறைகளைக்கூட பிளக்கின்றன. இங்கே முளைப்பதற்கு நல்ல நிலம் தேவையில்லை. ‘நம்பிக்கை’ என்னும் பலம் தேவைப்படுகிறது என்ற மாற்றுச் சிந்தனையை இந்த நூல் எனக்குள் ஏற்படுத்துகிறது. இந்த நூல், வாசிக்கும் ஒவ்வொருவரையும் சற்றே அசைத்துப் பார்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
பாசமுள்ள படைப்பாளனும், பயனுள்ள படைப்பும் வளரட்டும்.
வாழ்த்துகள்.
No comments:
Post a Comment